சபரிமலையில், வலியகடுத்த சுவாமி (மூத்த கடுத்த சுவாமி) மற்றும் கொச்சுகடுத்த சுவாமி (இளைய கடுத்த சுவாமி) ஆகியோருக்கென இரண்டு கோயில்கள் உள்ளன. அவர்கள் இருவரும் சுவாமி ஐயப்பனின் படையில் படைத்தளபதிகளாக இருந்ததாக நம்பப்படுகின்றது.
புராணம் இவ்வாறு சொல்கின்றது: வலியகடுத்தர் சிறந்த போர்வீரராகவும், பந்தளம் இராஜ்ஜியத்தின் படைத் தலைவராகவும் இருந்தார். அவருக்குத் துணையாக கொச்சுகடுத்தர் இஞ்சிப்பாறை களரியைச் சேர்ந்த (ஒரு பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மையம்) ஒரு துணிச்சலான போர்வீரர் ஆவார். வலியகடுத்தரின் தலைமையின் கீழ் பந்தளம் படைக்கான பயிற்சிப் போட்டியில் சிறந்து விளங்கிய கொச்சுகடுத்தர் ஐயப்பனின் படையில் சேர்ந்துகொண்டார். அவர்கள் ஒன்றுசேர்ந்து ஐயப்பனுக்காக வீரத்துடன் போரிட்டனர், உதயனின் இஞ்சிப்பாறை கோட்டையை அழிப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
கரிமலை போரின்போது கொச்சுகடுத்தரின் துணிச்சல் குறிப்பிடும்படியாக இருந்தது, தனது இரண்டு கால்களையும் இழந்தபோதிலும் கூட அதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். போருக்குப் பின்னரும் கூட, சபரிமலையில் உள்ள அவரது சமாதிக்கு (தியான உணர்வு நிலை) ஐயப்பன் திரும்பி வந்தபோது, கொச்சுகடுத்தர் பந்தளத்திற்குத் திரும்பி வர மறுத்து சபரிமலையிலேயே தங்கிவிட முடிவெடுத்தார்.
பழங்காலத்தில், மகரவிளக்கு திருவிழாவின்போது சபரிமலையில் கொச்சுகடுத்தரின் குடும்ப உறுப்பினர்களால் ஒரு வகையான வழிபாடு (பீட பூஜை) மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சபரிமலை கோயில் 1950-இல் புதுப்பிக்கப்பட்டபோது, வலியகடுத்தர் மற்றும் கொச்சுகடுத்தருக்காக கோயில்கள் கட்டப்பட்டன. இந்தக் கோயில்கள் அவர்களின் அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் துணிச்சலுக்கு சான்றாகவும், சுவாமி ஐயப்பனின் மரபுக்கு அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்வதாகவும் விளங்குகின்றன.