சபரிமலை கோயில் சன்னிதானம் எனவும் அழைக்கப்படுகின்றது. சன்னிதானம் என்பது சொர்க்க வாசஸ்தலம் அல்லது கடவுள் வசிக்கும் வீடு ஆகும். கோயிலானது தரை மட்டத்திலிருந்து 40 அடி உயரத்தில் உள்ள சமவெளியில் அமைந்துள்ளது. நான்கு குவிமாடங்களுடன் கூடிய தங்கப் படலத்தால் மூடப்பட்ட கூரையைக் கொண்ட பிரதானக் கோயில் (கருவறை), இரண்டு மண்டபங்கள் (மச்சு வீட்டின் முகப்பு போன்ற அமைப்புகள்), பலிபீடம் (தியாக கல் பீடங்கள்), பலிக்கல்புரா (சடங்கு திருப்படையல்களுக்கான கல் அமைப்பு) மற்றும் தங்கத் தகடு வேயப்பட்ட கொடிமரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சபரிமலையின் பதினெட்டாம்படி அல்லது பதினெட்டுப் படிகளின் அடையாள முக்கியத்துவம் மிகவும் பழமை வாய்ந்த நம்பிக்கைகள் மற்றும் புராணங்களில் ஆழந்த ஈடுபாடு கொண்டதாக உள்ளது. தாந்த்ரீக மரபுப்படி, 18 என்ற எண் எட்டு ஜீவாத்மாக்களையும் (உடல் சுயங்கள்) மற்றும் 10 பரமாத்மாக்களையும் (பிரபஞ்ச சுயம்) குறிக்கின்றது. பதினெட்டு என்பது நம் உடல் ஐந்து உயிரணுக்கள், ஆறு நிலைமைகள் மற்றும் ஏழு தாதுக்களைக் குறிக்கின்றது என்பது ஐதீகம்.
சபரிமலையின் மிக முக்கிய உபதெய்வமாக மாளிகைப்புரத்தம்மா முக்கியத்துவம் பெற்றுள்ளார். பதினெட்டாம்படி (18 படிகள்) ஏறி ஸ்ரீ தர்ம சாஸ்தாவை வணங்குகின்ற பக்தர்கள் திரும்பி வரும்போது மாளிகைப்புரத்தம்மாவையும் வணங்க வேண்டும். சபரிமலையில் பகவதியாக (பெண் தெய்வம் (தேவி)) வணங்கப்படும் மாளிகைப்புரத்தம்மா மாளிகை போன்ற ஸ்ரீ கோவிலில் (கருவறை) வசிப்பதால் அவருக்கு அப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. குருதி சடங்கு பந்தளத்தின் அரச பிரதிநிதி முன்னிலையில் நடத்தப்படுகின்றது.
சபரிமலை கோயில் புராணத்தில் மணிமண்டபம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. இது சன்னிதானத்தில் தெய்வம் வசிக்கும் புனிதத்தன்மை வாய்ந்த இடமாக நம்பப்படுகின்றது. இந்த இடம் வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. ‘மறவர் படையைத்’ தோற்கடித்த பின் சுவாமி ஐயப்பன் இங்கு ஓய்வெடுத்தார் என்பது ஐதீகம். இந்த இடம் புனிதமானது, ஏனென்றால் இங்கு தான் அவர் ஆழ்ந்த தியான நிலையை எய்தினார். இந்தத் தியானத்தின்போது அவர் வழிபட்ட மூன்று தாந்த்ரீக வட்டங்களில் ஒன்று இங்கு அமைந்திருப்பதாகவும், மற்ற இரண்டு வட்டங்கள் சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படியில் அமைந்திருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
சபரிமலையில், வலியகடுத்த சுவாமி (மூத்த கடுத்த சுவாமி) மற்றும் கொச்சுகடுத்த சுவாமி (இளைய கடுத்த சுவாமி) ஆகியோருக்கென இரண்டு கோயில்கள் உள்ளன. அவர்கள் இருவரும் சுவாமி ஐயப்பனின் படையில் படைத்தளபதிகளாக இருந்ததாக நம்பப்படுகின்றது.
இந்துக்களைப் பொறுத்தவரை, பம்பை நதி கங்கையைப் போன்றே புனிதமானது, பெரும்பாலும் இது தட்சிண பாகீரதி என அழைக்கப்படுகின்றது. பல புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் வழியாகப் பாய்கின்ற பம்பை, தன் இரு கரைகளுக்கும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அளிக்கிறது. பம்பையின் ஆன்மீகப் புராணங்கள் சபரிமலையுடனும் சுவாமி ஐயப்பனுடனும் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன.
சுவாமி ஐயப்பன் வாவர் சுவாமியுடன் கொண்டிருந்த நட்பு பற்றிய வரலாற்றுக் கதை சபரிமலை குறிப்பிடுகின்ற மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகின்றது. சபரிமலைக்குச் செல்ல பாரம்பரிய வழியைத் தேர்ந்தெடுக்கும் புனிதப் பயணிகள் எருமேலிக்குச் சென்று வாவர் மசூதியை வழிபட்ட பின்னரே மலையேறுகின்றனர். புராணத்தின்படி, ஒரு முஸ்லிமாகிய வாவர் சுவாமி ஐயப்பனின் விசுவாசமுள்ள நண்பர் ஆவார். ஐயப்பன் பாடல்களில், வாவர் ஐயப்பனின் நெருங்கிய தோழராக ஆவதற்கு முன் பல முறை அவரிடம் சண்டையிட்டுத் தோல்வியுற்ற வீரனாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலையில், கோயில் சடங்குகள் பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பதில் தந்திரி (முதன்மை அர்ச்சகர்) ஒரு முக்கியப் பங்காற்றுகிறார். சபரிமலை தந்திரிகள் செங்கன்னூர் தாழமன் மடம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சுவாமி ஐயப்பனுக்குத் தாந்த்ரீக பூஜைகள் செய்ய பந்தளம் அரச குடும்பம் தாழமன் பிராமணர்களை ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்ததாக நம்பப்படுகின்றது. தரநல்லூர் குடும்பத்துடன், கேரளாவின் ஆரம்பகால தாந்த்ரீக குடும்பங்களில் ஒன்றாக தாழமன் கருதப்படுகின்றது.