கேரளாவின் மூங்கில் தெப்பச் சவாரிகளின் சிறப்பம்சங்களில் ஒன்று என்னவெனில், அது வாழ்க்கையில் ஒருவரை நிதானமாகச் செயல்பட வைக்கிறது. இரைச்சல் மிகுந்த மோட்டார் படகுகளுக்குப் பதிலாக, அமைதியான மூங்கில் தெப்பங்கள் உங்களை வனப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் அழைத்துச் செல்கின்றன. இவற்றில் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளும் அமைந்திருக்கலாம். இதனால் கிடைக்கும் அனுபவத்தின் மூலம் அவசரப்படாமல், செவிமடுத்து, கவனித்து, இயற்கையோடு இணைந்து மெதுவாகப் பயணித்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.


மூங்கில் தெப்பச் சவாரி என்பது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் பெரிய வனவிலங்குப் பகுதிகளின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக விளங்குகிறது. பெரியார் புலிகள் காப்பகம் (தேக்கடி), பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் (பாலக்காடு), வயநாட்டில் உள்ள கரலாட் ஏரி, திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள கோட்டூர்-நெய்யாறு ஆகிய இடங்களில் இத்தகைய சூழலைக் காணலாம். அங்குள்ள உள்ளூர் மக்கள் வழக்கமாக இதனை மென்மையான மலையேற்றத்துடன் அல்லது இயற்கை நடைப்பயணங்களுடன் இணைத்து ஏற்பாடு செய்கின்றனர். காலை நேரத்தில் ஈரப்பதமான இலையுதிர் காட்டில் நீங்கள் மலையேற்றம் மேற்கொள்ளலாம், காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொண்ட பின்னர் வழித்தடத்தின் ஒரு பகுதியாக நீங்கள் தெப்பப் பயணம் மேற்கொள்கிறீர்கள்.


அந்தப் பகுதிகள் புவியின் பல்லுயிர் வளம் கொண்டவை என்பதால், நீங்கள் வெறும் “சவாரிக்காக மட்டும் அழைத்துச் செல்லப்படுவதில்லை”. செல்லும் வழியெங்கும் விலங்குகளின் ஒலிகள், தடம், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றி வழிகாட்டிகள் விளக்கிக்கொண்டிருக்க, நீங்கள் நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதியிலும் வனத்திலும் யானைகள், காட்டெருமைகள், சம்பார் மான்கள், நீர்நாய்கள், நீர்ப் பறவைகள், வேட்டையாடும் பறவைகள் ஆகியவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். வயநாடு மாவட்டத்தில் உள்ள கரலாட் ஏரி, குருவா தீவு ஆகிய பகுதிகளில் மூங்கில் தெப்பச் சவாரிகள் நீர்நிலைப் பயணத்தை மிகவும் அமைதியானதாகவும் குறுகியதாகவும் ஆக்குகின்றன. இந்தப் பயணங்களின்போது விலங்குகளைப் பார்ப்பதை விட தூய காற்றையும், அமைதியான காயல்களையும் அனுபவிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


வழக்கமாக, பருவமழைக் காலத்துக்குப் பின் தொடங்கும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சிறந்த பருவம் ஆகும். வழித்தடங்கள் மிகவும் நிலையாக இருப்பதும் வானிலை குளிர்ச்சியாக இருப்பதும் தவிர, ஏரி அல்லது நீர்த்தேக்கத்தின் மீது காட்சியும் தெளிவாகத் தெரிகின்றது. சில புலிகள் காப்பகங்களிலும் சூழல் சுற்றுலா மையங்களிலும், கட்டாய வழிகாட்டிகளுடனும் வரையறுக்கப்பட்ட குழு அளவுகளுடனும் கூடிய நிர்ணயிக்கப்பட்ட நேர ஒதுக்கீடுகள் (காலை / முழு நாள் / அரை நாள்) கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே, முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.


இந்த இடங்களில் பெரும்பாலானவை வனங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளன, இங்கு வனத்துறை / வனவிலங்குத் துறைகளோ அல்லது அவற்றின் சூழல் சுற்றுலாப் பிரிவோ இந்தத் திட்டங்களை நடத்துகின்றன, சில நேரங்களில் உள்ளூர்ப் பழங்குடியின சமூகங்களும் இதில் இடம்பெறுகின்றனர். குழுவின் அளவு, வருகை நேரம், ஆடைக் கட்டுப்பாடு, நடத்தை ஆகியவை தொடர்பான விதிகள் மிகக் கடுமையாக இருந்தாலும், அவை பார்வையாளர்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன.


குறிப்புகள்

சிரம நிலைக்குப் பொருத்தமாகச் செயல்படுங்கள்

நீங்கள் குழந்தைகள் அல்லது முதியவர்களுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், ஏரி அல்லது நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படும் குறுகிய சவாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்துகொள்ளும் அனைவருமே நீண்ட நடைப்பயணம் செல்லக்கூடியவர்களாக, நாள் முழுவதும் வெளிப்புறப் பயணம் செல்லும் திறன் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே முழு நாள் பெரியாறு அல்லது பரம்பிக்குளம் சுற்றுலாத் திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிடவும்

பெரியாறு, பரம்பிக்குளம், நெய்யாறு-கோட்டூர் ஆகியவற்றில் தெப்பச் சவாரிக்குப் பொதுவாக அதிகாரப்பூர்வ சூழல் சுற்றுலா மையங்கள் அல்லது இணையதளங்கள் வாயிலாக முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுகின்றது. பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட வருகை நேரம் என்பது அதிகாலை நேரம் ஆகும்.

பாதுகாப்பு முதன்மையானது

வழிகாட்டிகளிடம் இருந்து அறிவுறுத்தல்களைத் தெரிந்துகொள்ளவும், உயிர்க்காப்பு மேலங்கிகளைச் சரியாக அணியவும், தெப்பத்தின் பக்கவாட்டில் சாய்ந்து பார்க்கக் கூடாது. அமைதி, குப்பை போடுதல், பயணம் தொடர்பான வன விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சரியான ஆடைகளை அணியவும்

பெரும்பாலான பயணத் திட்டங்கள் மலையேற்றம் மற்றும் தெப்பச் சவாரி இரண்டையுமே கொண்டிருக்கும் என்பதால், இலேசான, எளிதில் உலரக்கூடிய ஆடைகளும் தொப்பியும் அணிதல், சன்ஸ்கிரீன் பூசுதல், நல்ல பிடிப்புள்ள நடைப்பயிற்சி ஷூக்கள் அல்லது காலணிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை உதவிகரமாக இருக்கும்.