கேரளாவின் அதிகம் பேர் செல்லும் சில முக்குளித்தல் தலங்களுடன் ஒப்பிடும்போது வர்க்கலாவுக்கு அருகில் உள்ள இடவை (எடவா) அமைதியான கடற்கரைச் சூழலை வழங்குகிறது. வர்க்கலாவுக்கும் இடவை (எடவா) -க்கும் இடையிலான பகுதி ஒப்பீட்டளவில் அமைதியாகவும், குறைவான கூட்டத்துடனும், மேற்பரப்பில் அலையின் வேகம் மெதுவாகவும் காணப்படுகின்றது.


இப்பகுதியில் முக்குளிப்பு பொதுவாக வர்க்கலா-இடவை (எடவா) கடற்கரைப் பகுதியில் நடத்தப்படுகிறது. பருவகாலத்தையும் பிற வானிலைச் சூழல்களையும் பொறுத்து இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவக்கூடும். இங்குள்ள அனுபவம் பரபரப்பு மிகுந்த செயல்பாடுகளைக் கொண்டதல்ல, மாறாக இது நீருக்கடியிலான சூழலில் நிதானமான, அவசரமில்லாத அறிமுகத்தைப் பெறுவதையே முதன்மையானதாகக் கொண்டுள்ளது.


இந்த அமைப்பு ஆரம்பநிலையாளர்களுக்கும், சிறிய குழுக்களில் வழிகாட்டுதலுடன் கூடிய முக்குளிப்புகளை விரும்புபவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். நீர்ப்பரப்புக்கு மேல் கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள் குறைவாக இருப்பதால், ஒருவர் தன் கவனம் முழுவதையும் முக்குளிப்பிலேயே செலுத்த முடிகிறது. இதனால் இது மிகவும் நிதானமான, கவனமாகக் கருத்தில் கொள்ளும் அனுபவத்துக்கு ஏற்ற தெரிவாக அமைகிறது.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இடவை (எடவா) கடற்கரையில் கடல் நீரில் இந்தச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த இடம் வர்க்கலாவில் இருந்து சுமார் 4-5 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து 40-45 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, இரண்டு இடங்களில் இருந்தும் சாலை மார்க்கமாக நாம் இங்கு எளிதில் சென்றடையலாம்.

தொலைவு

வர்க்கலா முதல் இடவை (எடவா) வரை சுமார் 4-5 கி.மீ. மட்டுமே

திருவனந்தபுரம் நகரம்: 45-48 கி.மீ.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 48-52 கி.மீ.

கடற்கரையை அணுகக்கூடிய இடங்களைச் சென்றடைய பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோரிக்‌ஷாக்கள் போன்ற பல்வேறு உள்ளூர் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம்.

வேலை நேரங்கள்

முக்குளிப்புக்கான நேரம் வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரையிலான நேரங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றது, இது கடலின் நிலைமை மற்றும் வானிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அறிவுறுத்தல்கள் மற்றும் ஆயத்தப்படுத்துதல் உட்பட, ஓர் அமர்வுக்கான மொத்த நேரம் சுமார் 30-40 நிமிடங்கள் ஆகும். உண்மையான முக்குளிப்பு நேரம் தோராயமாக 15-25 நிமிடங்கள் ஆகும்.

வயது வரம்புகள்

ஆபரேட்டரின் கொள்கையைப் பொறுத்து சாதாரணமாக 10 முதல் 12 வயதினருக்கும், அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

கடினத்தன்மை நிலை

மிதமானது

பருவம்

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் சிறந்த பருவமாகக் கருதப்படுகிறது.

தோராயமான செலவு

ஒரு நபருக்கான கட்டணம் சுமார் 3,000 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை ஆகும்.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக இருந்தால் நீருக்கடியில் புகைப்படமும், குறுங் காணொளியும் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பொதுவாக, ஊடகங்கள் பயிற்சி பெற்ற பணியாளர்களால், நீர் புகாத உபகரணங்களைப் பயன்படுத்திப் படம் பிடிக்கப்படுகின்றன.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

உபகரணத் தொகுப்பு முகக்கவசம், துடுப்புகள், BCD, ரெகுலேட்டர், ஆக்சிஜன் உருளை போன்ற, ஸ்கூபா டைவிங் செய்ய அவசியமாகத் தேவைப்படுகின்ற உபகரணங்களைக் கொண்டுள்ளது.

முக்குளித்தலின்போது சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர் உங்களுடன் இருப்பார். நீருக்கடியில் செல்வதற்கு முன் உங்களுக்கு ஒரு குறுகிய பயிற்சியும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.