கேரளாவின் ஆரம்பகால கடற்கரைச் சுற்றுலாவை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த கோவளம், இப்பொழுது மாநிலத்தின் செயல்பாட்டில் உள்ள ஸ்கூபா டைவிங் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தனது பாதுகாப்பான சிறுவளைகுடாக்கள், தெளிவான நீர், இயற்கையான பாறை அமைப்புகள் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற இந்த நகரம் ஆரம்பநிலையாளர்கள், அனுபவமிக்க முக்குளிப்போர் என இருவருக்குமே பொருத்தமானதாக விளங்குகிறது.


கடற்படுகையின் படிப்படியான சரிவு இதனை ஆரம்பநிலையாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக ஆக்குகிறது. அதே நேரத்தில், ஆழமான பகுதிகளும் நீருக்கடியில் உள்ள பாறை அமைப்புகளும் அனுபவம் வாய்ந்த முக்குளிப்போரைத் தன்வசம் ஈர்க்கிறது. நீர் தெளிவாக இருக்கும்போது அதன் புலப்படும் தன்மை மேம்படுவதால், கிளிமீன், கடல் முள்ளெலி, எப்போதாவது ஆக்டோபஸ் ஆகியவை உட்பட, பவளப்பாறைத் திட்டுகள், பவளப்பாறை மீன்கள் ஆகிய அனைத்துமே தெளிவாகத் தெரிகின்றன.


நீருக்கடியில் உள்ள சூழ்நிலையின் ஒட்டுமொத்த அனுபவமே கோவளம் பகுதியில் ஸ்கூபா டைவிங்கைத் தனித்துவமாக்குகிறது. ஒவ்வொரு முக்குளிப்பும் வெவ்வேறு காட்சியை வழங்குகிறது, இது ஆய்வு மனப்பான்மையை இயற்கையுடனான நெருங்கிய தொடர்புடன் இணைக்கிறது.


முக்குளித்தல்கள் சான்றளிக்கப்பட்ட சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படுகின்றன, PADI போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்களும் இதில் அடங்குவர். பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் இங்கு ஒவ்வொரு அனுபவத்தையும் வழிநடத்துகின்றனர்.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

ஈவ்ஸ் கடற்கரை, லைட் ஹவுஸ் கடற்கரை போன்ற இடங்கள் உள்ளிட்ட திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் ஸ்கூபா டைவிங் மேற்கொள்ளப்படுகின்றது.

தொலைவு

கோவளம் நகரம்: 0-2 கி.மீ.

திருவனந்தபுரம் நகரம்: 13 கி.மீ.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 14-15 கி.மீ.

திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையம்: 13 கி.மீ.

அங்கு செல்வதற்கு பேருந்து, டாக்ஸி, ஆட்டோ சேவைகளும் கிடைக்கின்றன.

வேலை நேரங்கள்

காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை (கடலின் நிலைமைகள் பொறுத்தது)

மொத்தக் கால அளவு

அறிவுறுத்தல்கள் உட்பட 30-40 நிமிடங்கள்

நீருக்கடியில் செலவிடும் நேரம்

15–25 நிமிடங்கள்

முன்கூட்டியே முன்பதிவு செய்தல்

உங்கள் இடத்தை உறுதிப்படுத்த முன்கூட்டியே முன்பதிவு செய்வது உகந்தது. வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள நாட்களிலும், உங்களுக்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது சாலச் சிறந்தது.

வயது வரம்புகள்

10 முதல் 12 வயதினருக்கும், அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது

கடினத்தன்மை நிலை

மிதமானது

பருவம்

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்களில் கடலின் நிலையை முன்கூட்டியே கணிக்க இயலாது என்பதாலும், கடல்நீரோட்டங்கள் வலிமை மிக்கதாக இருக்கும் என்பதாலும் நிலைமை ஆபத்தானதாக இருக்கும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடல் அமைதியாக இருப்பதால், நீருக்கடியில் நடக்கும் களியாட்டங்களை ஆராய்வதற்கு இது மிகவும் உகந்த காலமாக விளங்குகிறது.

தோராயமான செலவு

முக்குளித்தல் வகையைப் பொறுத்து ஒரு நபருக்கு 2,000 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை (பரிசோதனை முக்குளிப்பு / வழிகாட்டப்பட்ட முக்குளிப்பு / ஆழம்).

அனுமதி மறுக்கப்பட்டவை

பாதுகாப்பை உறுதிப்படுத்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் தளர்வான நகைகளையும் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். மது அருந்திய நிலையில் அல்லது நீங்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் முக்குளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்டுப்பாடுகள்

லைட்ஹவுஸ் கடற்கரை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கீழ் வருவதால் அங்கு ட்ரோன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

ஸ்கூபா டைவிங் மையங்களை நடத்தும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிடமும் நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் தொழில்முறைக் கலைஞர்கள் உள்ளனர். உன்னதத் தரத்திலான புகைப்படங்களையும் காணொளிகளையும் அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.

நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் (சுமார் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை) GoPro காணொளிகளையும் புகைப்படங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

சிறப்பு அனுமதி பெற்றால் தவிர, லைட்ஹவுஸ் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகள் ட்ரோன் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

ஸ்கூபா உபகரணங்கள் (முகக்கவசம், துடுப்புகள், BCD, ரெகுலேட்டர், ஆக்சிஜன் உருளை), வெட்சூட், சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர், நீருக்கடியில் பயிற்சி அமர்வு.