

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆகிய இரண்டு மதிப்புமிக்க தொலைநோக்குச் சிந்தனையாளர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருந்தன. இந்திய மறுமலர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகத் திகழ்ந்த தாகூர், கேரள மக்களைத் தட்டியெழுப்பிய ஸ்ரீ நாராயண குரு இருவருமே அன்புடன் ‘குருதேவ்’ என்று அழைக்கப்பட்டனர். சாந்தி நிகேதனுக்கு நிதி திரட்டுவதற்காக சி. எஃப். ஆண்ட்ரூஸ் என்பவரின் துணையுடன் தாகூர் கேரளா சென்றிருந்தபோது அவர்களுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நிகழ்ந்தது. தாகூர் குருவால் ஆழமாக ஈர்க்கப்பட்டார், அவரைப் போன்ற ஆன்மிகப் பேரொளியைப் பரப்பும் ஒருவரை இதுவரை தான் சந்தித்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார். குருவிடம் மனித உருவில் கடவுளைக் கண்டதாக ஆண்ட்ரூஸும் குறிப்பிட்டார். குமாரன் ஆசானின் கவிதையாகிய திவ்யகோகிலம், கேரளாவுக்கு அவர் மேற்கொண்ட இந்த முக்கியத்துவம் மிக்க பயணத்தின்போது தாகூரை ஆழமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பல பெரிய ஆளுமைகள் நாராயண குருவைத் தேடிச் சென்றபோதிலும், குரு தாமாகவே ரமண மகிரிஷியைச் சந்திக்கச் சென்றார். 1916-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ரமண மகரிஷியின் ஆசிரமத்துக்கு குரு பயணம் மேற்கொண்டார். இது குறிப்பாக கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஏனெனில், தென்னிந்தியாவில் கடுமையான சாதிப் பாகுபாடுகள் நிலவிய காலகட்டத்தில் மகரிஷி சாதி அல்லது பிறப்பிடம் என்ற எந்தப் பேதமும் இன்றி அனைத்து மக்களையும் வரவேற்றதால், அவரது சீடர்கள் அவருக்கு ‘பகவான்’ என்ற பட்டத்தை வழங்கியிருந்தனர்.
ஸ்ரீ நாராயண சேவா ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக குரு காஞ்சிபுரத்துக்கு வந்திருப்பதை அறிந்த ரமண மகரிஷியின் சீடர் ஒருவர், திருவண்ணாமலைக்கு வருமாறு குருவுக்கு அழைப்பு விடுத்தார். மலை மீதுள்ள ஸ்கந்த ஆசிரமத்தில் ரமண மகரிஷியை குரு சந்தித்தார். இருவருமே அத்வைதத் துறவிகள் என்பதால், மௌனமே அவர்களுடைய வணக்கமாக இருந்தது. குரு சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, மகரிஷியுடன் உணவு அருந்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டார். குரு இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நிர்விருதி பஞ்சகம் என்ற தலைப்பில் ஐந்து பாடல்களை இயற்றி, அவற்றை மகரிஷிக்கு அனுப்பினார்.

திருவிதாங்கூரின் வெளிநாட்டு திவானாகிய திவான் வாட்ஸ் 1925-இல் மேற்கொண்ட வருகை, வெளிநாட்டவர் மத்தியிலும் கூட நாராயண குருவைச் சந்திப்பதில் இருந்த பரவலான ஆர்வத்தைச் சுட்டிக்காட்டுகிறது. மதிப்புமிக்க அந்த முனிவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாக வாட்ஸ் தெரிவித்தார், வர்கலாவின் இயற்கை அழகை அவர் பெரிதும் பாராட்டினார். தங்களுடைய கலந்துரையாடலின்போது, திருவிதாங்கூர் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றி அவர்கள் ஆழமாக ஆராய்ந்தனர். குறிப்பாக, நிர்வாகிகளிடையே நிலவிய வகுப்புவாதப் பிரிவினைகளை வாட்ஸ் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த குரு, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரிடம் சிறப்புக் கருணை காட்டுமாறு அறிவுறுத்தினார். வாட்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் அவரை மகரிஷிக்கு நிகரான ஓர் உன்னத ஆன்மாவாகக் கருதினர். குருவைப் போன்ற தகுதிநிலை கொண்ட ஓர் ஆன்மிகத் தலைவரைச் சந்திக்க அவர் காட்டிய ஆழ்ந்த ஆர்வத்துக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.