வரலாற்றில் உலகுக்கு மதிப்பு மிக்க பாடங்களைக் கற்பித்த பல மாமனிதர்களைப் போலவே, நாராயண குருவும் வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட வேலைகளும் ஒட்டுமொத்த சமூகத்தின் சமூக மாற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது போதனைகள் கேரளாவின் சமூக வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன, அவை அவரது ஞானத்தையும் பரந்த நோக்கையும் வெளிப்படுத்துகின்றன.
‘மனிதனுக்கு ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள்’, ‘சமயம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருந்தால் அதுவே போதும்’, ‘வாதிட்டு வெற்றி பெறுவதற்கு அல்ல, அறிந்துகொண்டு தெரிவிப்பதற்கே’, ‘அமைப்பின் மூலம் வலிமை பெறுங்கள், கல்வி மூலம் அறிவொளி பெறுங்கள்’, ‘மது என்பது விஷம்’ போன்ற போதனைகள் காலத்தால் அழியாத முக்கியத்துவம் கொண்டுள்ளன.
குருவின் போதனைகள் எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளன, அவை பரந்த பொருளைக் கொண்டுள்ளன. மனிதனுக்கு ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள் என்பது அவரது மிக அடிப்படையான போதனை ஆகும். ஒரே சாதி என்ற கருத்து 1920-ஆம் ஆண்டில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது குரு தெரிவித்தார். இது, சாதியின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் மனித நேயத்தை மறுத்த ஒரு காலகட்டத்தில் நடந்தது. 1914-இல் எழுதப்பட்ட ‘ஜாதிநிர்ணயம் (சாதி நிர்ணயம்)’ என்ற தனது கவிதையில், மனிதநேயம் மட்டுமே மனிதனின் ஒரே சாதி என்று குரு சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர் ஒரே சாதி என்ற இந்தக் கருத்தை, மனிதனுக்கு ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள்; ஒரே கருப்பை, ஒரே வடிவம், அதில் எந்த வேறுபாடும் இல்லை என மேலும் விரிவுபடுத்துகிறார்.
குரு அனைத்துப் புலங்களிலும் ஒற்றுமையைக் காண்கிறார். ஒரே சாதி என்பதன் மூலம், குரு மனிதனின் இனத்தைக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் அனைவரும் ஒரு பெண்ணிடம் இருந்து தான் பிறக்கின்றனர்; ஒரேயொரு கருப்பை மட்டுமே உள்ளது. வடிவத்திலும் கூட, அனைவரும் ஒன்று தான். வேறுபாடு என்ற உணர்வு மனிதர்களின் புரிதலில் இருந்து தான் தோன்றியது என அந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமயத்தின் மதிப்பை உணர்ந்துள்ள யாரும் தங்களுடைய சமயம் மற்ற சமயத்தை விட உயர்ந்தது என்றோ அல்லது தாழ்ந்தது என்றோ நினைப்பதில்லை. இந்த போதனையின் மையப்பகுதி ஒரே சாதி என்பதாகும். ஒரே சமயம் மற்றும் ஒரே கடவுள் ஆகியவை ஒரே சாதி என்பதன் பாகங்கள் மட்டுமே, சமயம் மற்றும் கடவுளின் அடிப்படையில் மக்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
சாதி அமைப்புக்கு எதிரான தனது எதிர்ப்பை குரு வெறும் போதனைகளில் மட்டும் காட்டவில்லை; அவர் தனது செயல்பாடுகளிலும் அவற்றை அமல்படுத்தினார். அனைத்துச் சாதிகளையும் சமயங்களையும் சார்ந்த குழந்தைகள் குருவின் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டனர். சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளை அவர் தத்தெடுத்து, வளர்த்து, கல்வி கற்பித்தார். அவர்களை ஆசிரமத்தில் உணவு சமைத்துப் பரிமாறச் செய்வார். தாம் நிறுவிய கோயில்களில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களை விலக்கி வைப்பதையும் அவர் எதிர்த்தார்.