அனைத்து சமயங்களும் பாரபட்சமின்றி பக்தியுடன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பெறப்பட்ட அறிவு சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் நாராயண குரு விரும்பினார். சமயம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக மாறினால் அதுவே போதும் என்ற போதனை, 1923-இல் அவரது சீடரான சகோதரன் அய்யப்பனுக்கு மதமாற்றம் குறித்து நடந்த ஒரு விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டது. பௌத்த சமயத்தைத் தழுவ வேண்டும் என, குருவின் மற்றொரு சீடரான டாக்டர். பல்பூவிடம் இருந்து ஒரு கருத்து எழுந்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் நிகழ்ந்தது. இந்து சமயத்திற்குள் காணப்பட்ட துன்பங்களால் வெறுப்படைந்து பௌத்த சமயத்திற்கு மாறுவதை ஆதரித்த அம்பேத்கரால் டாக்டர். பல்பூ ஈர்க்கப்பட்டார். ஒருவர் பின்பற்றும் சமயத்தை விட ஒழுக்கத் தூய்மையே (செயலில், வார்த்தையில், சிந்தனையில்) மிக முக்கியமானது என குரு வலியுறுத்தினார்.
சமயம் பக்தி என்ற போர்வைக்குள் அடைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சமயத்தை நிராகரிக்கும் ஒரு தத்துவம் குருவின் சிந்தனைகளில் வடிவம் பெற்றது. குரு சமயத்தை விட சமய வேறுபாடுகளில் அக்கறையற்றவராக இருந்தார். சமயம் என்பது மனிதநேயத்துக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இந்த போதனை மனிதகுலத்தின் அன்பின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்து பிறந்தது. இதில், ஒரு புதிய கண்ணோட்டத்தில் இருந்து சமயத்தைப் பார்க்க முயற்சித்தது தான் குருவின் பங்களிப்பாக இருந்தது.
ஆலுவாவில் 1924-இல் நடைபெற்ற சர்வ தர்ம சம்மேளனம் (அனைத்து சமய மாநாடு), நாராயண குருவின் ஒரே சமயம் என்ற கருத்தின் உச்சநிலையாக இருந்தது. அது சாதி, சமயம், கடவுள் ஆகிய எதுவும் இல்லாத அத்வைத ஆசிரமத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு உலகின் இரண்டாவது அனைத்து சமய மாநாடாகவும், ஆசியாவின் முதலாவது மாநாடாகவும் திகழ்ந்தது.
‘சர்வ தர்ம சம்மேளனம்’ அனைத்து சமயங்களின் ஒற்றுமையையும் பொதுவான சாராம்சத்தையும் நிரூபிக்கும் தளமாகவும், சாமானிய மக்கள் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ள உதவக்கூடியதாகவும் இருந்தது. குருவின் இந்தச் செய்தியுடன் பங்கேற்பாளர்கள் வரவேற்கப்பட்டனர்: வாதிட்டு வெற்றி பெறுவதற்காக அல்ல, அறிந்துகொண்டு மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே. இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர். முன்மொழியப்பட்ட சிவகிரி பள்ளியில் சமயங்களுக்கு இடையிலான ஆய்வுக்கான திட்டங்களை குரு அறிவித்தார். இந்த மாநாடு இந்தியாவில் பல்வேறு சமயங்களுக்கு இடையேயான முதல் உரையாடல் நிகழ்வுக்கான அடையாளமாக விளங்கியது.