வேதாந்தத்தில் உண்மையைத் தேடும் அகநோக்கு முறை பற்றி ஆத்மோபதேச சதகத்தில் குரு மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். உண்மையைப் பற்றிய சரியான மற்றும் தவறான அறிவுக்கு இடையில் அவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். ஞானானுபூதியின் (அனுபவ அறிவு) இறுதி நிலை துரியம் என்று அழைக்கப்படுகிறது. மாண்டூக்கிய உபநிடதம் எது துரியம் அல்ல என்பதை விளக்கிக் கூறுகின்ற அதே நேரத்தில், அது என்ன என்பதை குரு தனது ஆத்மோபதேச சதகத்தின் 28-ஆம் செய்யுளில் நேரடியாக விவரிக்கிறார். வெறும் அறிவியல் வரையறுக்கு அப்பாற்பட்டு, அது நேரடி அனுபவத்தின் மூலம் தெளிவடையும் ஒரு விஷயமாக இவர் அதைச் சித்தரிக்கிறார். 

ஆத்மோபதேச சதகமானது உண்மையைத் தேடுபவர்களின் தாகத்தைத் தணிக்கவல்ல ஓர் அறிவு ஊற்றாகத் திகழ்கிறது. இருப்பினும், மாயையான வாழ்க்கையின் ஆன்மிக சாராம்சத்தையும், அதற்குள் பொதிந்துள்ள ஆழமான தத்துவச் சிந்தனையையும் முழுமையாகப் புரிந்துகொள்வது ஒரு சவாலான முயற்சியாகவே உள்ளது. ”நான்” என்பதும் “அறிவு” என்பதும் வெவ்வேறானவை அல்ல என்றும், அவை ஒன்று தான் என்றும் குரு உறுதிபடக் கூறுகிறார். மாயை (மாயத் தோற்றம்) எனும் திரை விலகியவர்கள் மட்டுமே இந்த உணர்தலைப் பெற முடியும். இந்தப் படைப்பில், நான் என்பதும் தூய விழிப்புணர்வும் ஒத்த சொற்கள் என அவர் கூறுகிறார். வேறு எதுவும் உண்மையாகவே இல்லை எனக் கூறிய அவர், இறைவணை உணர்தலுக்கான பாதையை நோக்கி அது நம்மை வழிநடத்துகிறது என்றார். மேலும், தரிசனமாலையின் ஞானதரிசனம் (அறிவின் பார்வை) பகுதியில், உண்மையான மற்றும் பொய்யான அறிவை குரு நுணுக்கமாக விவரிக்கிறார்: ஒரு கயிற்றைக் கயிறாகவே பார்ப்பது எப்படி உண்மையான அறிவோ, அதே போல ஒரு பொருளை உள்ளபடியே அறிவதும் உண்மையான அறிவாகும்.

மற்ற தலைப்புகள்