சாந்தலிங்க சுவாமிகளின் கதை, வணிகர் ஒருவர் சந்நியாசியாக மாறியதைக் குறிக்கின்ற தனிச்சிறப்பு மிக்க கதை ஆகும். சிறு வயது முதலே நாராயண குருவின் மீது ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்த வேலு, தனது துறவற ஆசைகள் வலுவடைந்ததால் உலக விவகாரங்களில் படிப்படியாகத் தன் ஆர்வத்தை இழந்தார். உள்மன அமைதியைத் தேடி குருவைச் சந்திக்க அவர் சிவகிரிக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு, தனது ஆன்மிக விருப்பங்களைத் தெரிவித்த அவருக்கு ஒரு துறவியாகத் தீட்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சாந்தலிங்க சுவாமிகள் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் பின் குரு அவரை சாரதா மடத்தின் பூசாரியாக நியமித்தார்.
குருவின் சமாதி (மரணம்) சாந்தலிங்க சுவாமிகளை ஆழமாகப் பாதித்தது, அவரும் சிறிது காலத்திலேயே சமாதி அடைந்தார்.
நாராயண குருவின் கருத்துகளுக்குத் தத்துவார்த்த அடித்தளம் அமைத்த மேதை நடராஜ குரு ஆவார். உலகளாவிய பார்வையாளர்களுக்குக் குருவை அறிமுகப்படுத்தியதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
நடராஜ குரு, டாக்டர். பல்பூவின் மகன் ஆவார். நடராஜ குருவை ஆலுவா அத்வைத ஆசிரமத்துக்கு அழைத்துவந்த குரு, தனது புத்திசாலித்தனமான சீடரின் விரிவான கல்வித் திட்டத்துக்குத் தேவையான ஊக்கத்தை வழங்கினார். அனைத்து சமயங்களின் சாராம்சத்தையும் உள்ளடக்கிய ஓர் அறிவு உருவாக்க மையத்தை சிவகிரியில் அமைக்க வேண்டும் என்ற குருவின் எண்ணத்தை நனவாக்க முன்வந்தவர் நடராஜ குரு ஆவார். பிரான்சில் உயர்கல்வி பயின்ற அவர், கல்விச் செயல்பாட்டில் தனிப்பட்ட காரணி என்ற தலைப்பில் பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் இருந்து D.Litt பட்டம் பெற்றார். ஐரோப்பாவில் இருந்தபோது அவர் பல பிரபலமான நபர்களுடன் தொடர்பில் இருந்தார். ரொமைன் ரோலண்ட் உடன் இணைந்து, அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவம் மற்றும் ஆன்மிகம் குறித்து முக்கிய விவாதங்களில் ஈடுபட்டார். இது ரோலண்டிற்கு நாராயண குருவின் தத்துவத்தில் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
சூஃபி குவார்ட்டர்லி என்ற செய்தித்தாள் மூலம் நடராஜ குரு மேற்கத்திய உலகுக்கு குருவின் தத்துவங்களை அறிமுகப்படுத்தினார். இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ‘குருவின் வழி’ (The Way of the Guru) என்ற புத்தகத்தையும் அவர் எழுதினார். அவர் அமெரிக்கா முழுவதும் பரவலாகப் பயணம் செய்து, பல்வேறு பல்கலைக்கழகங்களில் குருவின் போதனைகள் குறித்துச் சொற்பொழிவாற்றினார். மதிநுட்பம் வாய்ந்த அறிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய அவரால், குருவின் தத்துவமானது சமயம், கலை, தத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தக்கூடியது என்பதை நிரூபிக்க முடிந்தது. குருவின் தத்துவங்களுக்கு நடைமுறைச் சித்தாந்தக் கட்டமைப்பை வழங்குவதற்காக அவர் ஸ்ரீ நாராயண குருகுலத்தை நிறுவினார். அவரது படைப்பான குரு அருள் என்பது குருவின் வாழ்க்கை மற்றும் நோக்கங்கள் குறித்த அதிகாரப்பூர்வ நூலாகும்.
நடராஜ குரு பிற்கால வாழ்க்கையில் சைதன்ய யதியை தனது வாரிசாக நியமித்தார். நித்யா சைதன்ய யதி, ஸ்ரீ நாராயண குருவின் ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள் என்ற போதனையைத் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பரப்பியதுடன், நடராஜ குருவின் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.