கேரளாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், அத்தகைய ஒற்றுமைக்கு ஒரு வலுவான சமூக அமைப்பு தேவை என்பதையும் நாராயண குரு உணர்ந்தார். இந்தச் சமயத்தில், மைசூர் மகாராஜாவின் அரசவை மருத்துவராகவும் பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தொலைநோக்குச் சிந்தனையாளராகவும் விளங்கிய டாக்டர். பல்பூ, இதே போன்ற ஒரு யோசனையுடன் குருவை அணுகினார். ஒரு முறை சுவாமி விவேகானந்தர் மைசூர் மகாராஜாவின் அரண்மனைக்குச் சென்றிருந்தபோது, கேரளாவை “பைத்தியக்காரர்களின் புகலிடம்” என விவரித்திருந்தார், அந்தப் பிராந்தியம் குறித்த தனது கவலைகளை டாக்டர். பல்பூவிடம் தெரிவித்த அவர், அதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமூகப் பணிகளை வழிநடத்த பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு குருவை அடையாளம் காணுமாறு விவேகானந்தர் பரிந்துரைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக ஒரு சமூக அமைப்பு அவசியம் என்பதை நாராயண குருவிடம் டாக்டர். பல்பூ எடுத்துரைத்தார். தற்போதைய வாவூட்ட் யோகமே க்ஷேத்ர யோகம் எனப் பெயர் மாறியிருப்பதாகத் தெரிவித்த அவர், அதை ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) என்ற பெயரில் மேலும் மேம்படுத்தலாம் என்ற ஆலோசனையை குரு ஏற்றுக்கொண்டார்.
SNDP யோகம் 1903-ஆம் ஆண்டில் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது, பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சமூக உறுப்பினர்கள் இதில் சேர்ந்தனர். குருவின் விருப்பத்தின்படி, டாக்டர். பல்பூவின் ஆதரவின் கீழ் பெங்களூர் மற்றும் கொல்கத்தாவின் மேற்படிப்பை முடித்த பிறகு அருவிப்புரம் திரும்பி வந்த குமாரன் ஆசான், யோகம் அமைப்பின் செயலாளராக முக்கியப் பொறுப்பு வகித்தார். பிற்காலத்தில் மலையாள இலக்கியத்தின் ஜாம்பவான்களில் ஒருவராகப் பெயர் பெற்ற குமாரன் ஆசான், சுமார் பதினாறு ஆண்டு காலம் செயலாளராகப் பணியாற்றினார். நாராயண குரு அதன் முதல் தலைவர் ஆனார்.
நாராயண குருவின் சிந்தனைகளைப் பரப்புவதும், ஈழவர்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி, கோயில் கட்டுமானம், தொழில், கைவினைப் பொருட்கள் ஆகிய துறைகளில் அத்தியாவசிய உதவிகளையும், ஊக்குவிப்பையும் வழங்குவதுமே SNDP யோகம் அமைப்பின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. 1904-இல், குமாரன் ஆசான் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய ‘விவேகோதயம்’ (ஞானத்தின் உதயம்) என்ற மாத இதழ் யோகம் அமைப்பின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. கோயில் கட்டுமானப் பணிகளிலும் பிற முயற்சிகளிலும் யோகம் அமைப்பின் முழு ஆதரவும் குருவுக்குக் கிடைத்தது.
கோயில் நுழைவுப் பிரகடனம், மது ஒழிப்பு இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம் போன்ற முக்கியப் போராட்டங்களில் யோகம் தீர்க்கமான பங்காற்றியது. SNDP யோகம் அமைப்பின் வருகையால், ஈழவர்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்கள் ஆழ்ந்த மாற்றங்களை அனுபவித்தன. பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமெனில் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக நம்பினார்கள். யோகம் அமைப்பின் தோற்றம் சமூக உறுப்பினர்கள் தங்களின் இழந்த சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்கத் தூண்டியது.
அருவிப்புரத்தில் நடைபெற்ற SNDP யோகம் முதலாவது ஆண்டு மாநாட்டில், குரு முக்கியமான போதனைகளை வழங்கினார், குறிப்பாக சக்திவாய்ந்த கொள்கைகளைப் பரப்பினார்: ”கல்வியின் மூலம் அறிவொளி பெறுங்கள்” மற்றும் “அமைப்பின் மூலம் வலிமை பெறுங்கள்.” அவரது வாழ்நாளில், கேராளாவின் பல்வேறு மையங்களில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வருடாந்திர யோகம் மாநாடுகளுக்கு குரு தலைமை தாங்கினார். இந்த வருடாந்திர மாநாடுகள் ஈழவ சமுதாயத்தைச் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தட்டி எழுப்புவதில் முக்கியப் பங்கு வகித்தன. மேலும், கேரளாவில் NSS (நாயர் சேவை சங்கம்) மற்றும் சாது ஜன பரிபாலன யோகம் போன்ற பிற சமூக அமைப்புகள் உருவாவதற்கு அவை அடித்தளம் அமைத்தன.
இந்த அமைப்புகள் அனைத்துச் சமூகங்களிலும் வழக்கத்தில் இருந்த ஊழல் நடைமுறைகளை ஒழிப்பதற்கும், சமூக சமத்துவத்தை வளர்ப்பதற்கும் தீவிரமாகப் பாடுபட்டன. SNDP ஆனது கேரளாவின் சமூக-கலாச்சார முன்னேற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றியது. நிறுவனம் சார்ந்த பணிகள் எவ்வாறு ஆழ்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு குருவால் வழிநடத்தப்பட்ட அமைப்புகள் மிகச் சிறந்த உதாரணங்களாக விளங்கின.