ஸ்ரீ நாராயண தர்ம சங்கம்

ஸ்ரீ நாராயண தர்ம சங்கம்

சமூக மேம்பாட்டுக்காக SNDP யோகம் ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்துச் செயல்படுத்தியதால், அதன் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் குருவின் போதனைகளைப் பரப்பவும் பல இளைஞர்கள் முன்வந்தனர். 1928-இல், ஸ்ரீ நாராயண குரு தனது துறவறச் சீடர்களின் கூட்டமைப்பான ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தை நிறுவினார். அவர் குறிப்பாக அதற்கு புத்த சமயம் தொடர்பான பெயரைச் சூட்டினார். இந்த அமைப்பின் மூலம் குரு மக்களுக்குச் சாதியற்ற மாதிரியை வழங்கினார். 

குருவின் துறவறச் சீடர்களாக பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட இடம்பெற்றிருந்தனர். சங்கம் உறுப்பினராக ஆவதற்கு தியாகம் மட்டுமே தகுதியாக இருந்தது; சாதியோ, சமயமோ அல்லது இனமோ தகுதி அல்ல என்பதை இது நிரூபித்தது. அவர் தனது நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் நிர்வாகத்தை இந்தத் துறவிகளிடம் ஒப்படைத்தார்; சந்நியாசியை (துறவி) ஒரு பொது ஊழியர், பரோபகாரி, துறவி என அவர் வரையறுத்தார். 

சாதி, சமயம் பாராமல் மக்களுடன் இணைந்து செயல்படுவது, உலகளாவிய பயனுடைமைக்காக அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, அனைவரின் கல்வி, சமூக, ஆன்மிக மேம்பாட்டுக்காகப் பாடுபவது ஆகியவை தர்ம சங்கத்தின் நோக்கங்களாக இருந்தன. ஆரம்பத்தில் சங்கத்தின் வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அவர் மற்றவர்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், அவர்களால் அதை உருவாக்க முடியாததால் குரு அந்த அமைப்புக்காக சில விதிகளைத் தானே உருவாக்கினார், அந்த விதிகளை விவரிப்பதற்காக ‘ஆசிரமம்’ என்ற நூலையும் அவர் எழுதினார். அந்தச் சங்கம் ஒருபோதும் இந்து சமயத்தின் ஒரு சாதாரணப் பிரிவாக மாறிவிடக் கூடாது என அவர் வலியுறுத்தினார். 

சமயத்தால் தூண்டப்படும் வெறுப்பையும் பிளவுகளையும் ஒழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த கருவிகளாக இந்த தர்ம சங்கங்கள் விளங்க வேண்டும் என குரு கற்பனை செய்தார். தன்னுடைய செயல்பாடுகள் தனது சொந்த சமுதாயத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும் என்பதே அவருடைய இறுதி விருப்பமாக இருந்தது. 


நாராயண குருகுலம்

நாராயண குருகுலம்

குருகுலம் என்பது இந்து சமயத்தின் மடம் (மடாலயம்) அல்லது ஆசிரமத்தை ஒத்ததாகும். குருவிடம் இருந்து பிரம்மவித்யாவை (பரம்பொருளைப் பற்றிய அறிவு) நேரடியாக அடைவதும், அதை அடைவதற்கான வாய்ப்புகளை மற்றவர்களுக்கு வழங்குவதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

சமூக அமைப்புகளுக்கும் தர்ம சங்கங்களுக்கும் குரு முக்கியத்துவம் அளித்தபோது, அவரது கருத்துகள் சமூக நன்மைக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பதை அவரின் சீடர்கள் உணரத் தொடங்கினர். இது குருவின் சீடர்களில் ஒருவரான நடராஜ குரு, நாராயண குருகுலத்தை நிறுவ வழிகோலியது. இது குரு-சீடர் உறவின் இணக்கமுறைத் தன்மையை மையமாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான கல்வி நிறுவனமாக இருந்தது. 

குருகுலத்தைத் தொடங்க அனுமதி கேட்டு நடராஜ குரு முதன்முதலாக நாராயண குருவை அணுகியபோது, அவருக்கு மூன்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: திருமணத்திற்குத் தடை விதிக்கக் கூடாது, குருவும் சீடர்களும் குடும்பத்தைப் போல நல்லிணக்கமாக வாழ வேண்டும், குருகுலமே உலகமாக இருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாராயண குருகுலம் தொடங்கப்பட்டது, அது முதலில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் செயல்படத் தொடங்கியது. குருவின் மற்றொரு சன்னியாசி சீடரான போதானந்த சுவாமிகள், குருகுலத்தைத் தொடங்க நடராஜ சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தார். 

இன்று, நாராயண குருகுலம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. நடராஜ குரு சிவகிரி மடத்தை மாதிரி நிறுவனமாக ஏற்றுக்கொண்ட பின், நாராயண குருகுலத்தின் முதன்மை அலுவலகம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் வர்கலா நகரில், ஸ்ரீநிவாசபுரத்தில் அமைந்துள்ளது. 

நடராஜ குருவின் இறப்புக்குப் பின், குரு நித்ய சைதன்ய யதி மற்றும் ஸ்ரீ முனி நாராயண பிரசாத் ஆகியோர் பிரிவின் செயல்பாடுகளை ஒன்றிணைக்க முயன்றனர். குருவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் வர்கலாவில் ஈஸ்ட் வெஸ்ட் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு பெரிய நூலகம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில், சிவகிரி புனிதயாத்திரைக் காலத்தின்போது வர்கலா குருகுலத்தில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. குருவின் தொலைநோக்குப் பார்வை தொடர்பான தத்துவ அறிவை வழங்குவதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.

மற்ற தலைப்புகள்