சைவ தரிசனம் - சக்தேய தரிசனம்

சைவ தரிசனம்

சைவ தரிசனம் என்பது பக்திக்கு ஒப்புயர்வற்ற முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தத்துவம் ஆகும். பக்தி என்பது அன்புடன் தொடர்புடையது என்று சைவர்கள் நம்புகின்றனர். பிரபஞ்சம் பன்முகத்தன்மை கொண்டதாகக் காணப்பட்டாலும், எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருப்பது தனித்துவமான சிவபெருமானே என்பதை சைவ தரிசனத்தின் மையக்கரு உறுதிப்படுத்துகிறது. குருவின் வாழ்க்கையிலும் படைப்புகளிலும் சைவ தரிசனம் மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. குருவின் பெரும்பாலான கோயில் பிரதிஷ்டைகள் சிவபெருமானின் குடும்பத்தைச் சேர்ந்த தெய்வங்களுக்குரியவை ஆகும். அத்துடன், குருவின் சிவ துதிப்பாடல்கள் அவருடைய மற்ற துதிப்பாடல்களை விட அதிகத் தீவிர அனுபவம் சார்ந்தவை ஆகும்.

கடவுளை உருவமானவராகவும் அருவமானவராகவும் வர்ணிப்பது சைவத் தத்துவத்தின் ஒரு சிறப்பம்சம் ஆகும். ஆத்மோபதேச சதகம் மற்றும் சதாசிவ தரிசனத்தில், குரு பிரபஞ்சத்தின் சாராம்சத்தைப் புகழ்கிறார். மேலும், குருவின் படைப்புகளில் காணப்படுகின்ற அருள் (தெய்விக இறையருள்) சைவத் தத்துவத்தின் ஒரு தாக்கம் ஆகும். அருள் என்பது குருவின் படைப்புகளில் பல முறை திரும்பத் திரும்ப வரும் ஒரு வார்த்தை ஆகும்.

சக்தேய தரிசனம்

யோகப் பயிற்சிகளைப் போலவே, சுய உணர்தலுக்காகத் தாந்த்ரீக முறைகளை குரு தழுவினார் என்பதை அவருடைய பக்திப் படைப்புகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. பண்டைய காலத்திலிருந்தே தென்னிந்தியாவில் சாக்திய மரபு நடைமுறையில் இருந்தது. தெய்விக அன்னையின் (சக்தி அல்லது தேவி) வழிபாடு என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். காளி வழிபாட்டை இந்த மரபின் ஆரம்ப வடிவமாகக் காண முடியும். வேத மற்றும் உபநிடதக் காலங்களின்போது, அது சக்தியையும் மாயையையும் வழிபடும் முறையாகப் பரிணமித்தது. 

சைவ மரபில், சிவன் என்பது எங்கும் நிறைந்த தூய உணர்வையும் செயலறு நிலையையும் குறிக்கிறது. மாறாக, சக்தி என்பது செயல்நிலை வடிவமாகவும் உருவத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. இது அனைத்து ஜீவாத்மாக்களிலும் (தனிப்பட்ட ஆத்மாக்களில்) குடிகொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் தோற்றம் இந்தப் பராசக்தியிடம் (ஒப்புயர்வற்ற சக்தி) இருந்தே உருவானது. 

குருவால் இயற்றப்பட்ட பஹுலேயாஷ்டகம், இந்திய வழிபாட்டு மரபுகளின் ஆழத்தைப் பற்றி ஆழ்ந்து ஆராய்கின்ற ஒரு யோகசாஸ்திர நூலாகக் கருதப்படுகிறது. தேவியின் மீதான நாராயண குருவின் துதிப்பாடல்கள் அனைத்திலும் தாந்த்ரீக நடைமுறைகளின் சாயல்களைக் காண முடிகிறது. பத்ரகாளி அஷ்டகம் மற்றும் காளி நாடகத்தில், காளி என்ற வார்த்தை திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பிந்தைய படைப்பில், தேவியின் சாந்தமான மற்றும் உக்கிரமான அம்சங்களைப் பற்றி குரு விரிவாகக் கூறுகிறார்.

மற்ற தலைப்புகள்