அமைதியான தெற்குப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடும்பன்தலா, திரிக்கரிப்பூர், தலங்கரா ஆகியவற்றை உள்ளடக்கிய, கேரளாவின் வடகோடியில் அமைந்துள்ள கயாக்கிங் பகுதி முற்றிலும் மாறுபட்ட காயல் அனுபவத்தை வழங்குகிறது. இங்குள்ள நீர்வழித் தடங்கள் அகன்றும் திறந்தவெளியாகவும் காணப்படுவதோடு, இவை அரபிக்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் ஓதங்களின் இயக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்தக் காயல்களின் பரந்தகன்ற தன்மை பரந்த அடிவானங்களுடனும் திறந்த வானத்துடனும் துடுப்புப் படகுப் பயணிகளுக்கு ஒரு சுதந்திர உணர்வை அளிப்பதோடு, காற்றின் தாக்கம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் நீரோட்டங்கள் காரணமாக சற்றுச் சவாலான சூழல்களையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்த வழித்தடம் குறிப்பாக மிதமான உடல் உழைப்பை விரும்புபவர்களுக்கும், இலேசான காற்று வீசும் சூழலில் திறந்த நீர்நிலைகளில் படகோட்டிச் செல்வதை வசதியாக உணர்பவர்களுக்கும் ஏற்றது. தெற்குப் பகுதியின் அமைதியான, நிலத்தால் சூழப்பட்ட காயல்களைப் போல் அல்லாமல், படகு செலுத்துவோர் இங்கு ஒரு துடிப்பான சூழலை எதிர்கொள்கின்றனர். இங்கு மெல்லிய காற்றில் நீர் சிற்றலைகளாக அசைந்தாடுவதால் பயணத்திற்கு அது சாகச அம்சத்தைச் சேர்க்கிறது. இந்த ஒட்டுமொத்த அனுபவம் காயல்களின் அமைதியையும், வட கேரளக் கடற்கரைப் பகுதியின் சிதைவுறாத இயற்கை அழகையும் ஒன்றிணைக்கிறது.
இந்தப் பாதையில் காணப்படும் பாரம்பரிய மீன்பிடிக் கிராமங்கள், ஆங்காங்கே அமைந்துள்ள அலையாத்திக் காடுகள், பரந்தகன்ற திறந்த நீர்நிலைகள் ஆகியவற்றின் கலவை இந்தக் காட்சியைச் சிறப்பானதாக மாற்றுகிறது. கயாக் படகோட்டிகள் மீன்வர்கள் வலைகளுடன் வேலை செய்வதையும், கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பாரம்பரியப் படகுகளையும், நீரில் மூழ்கியிருக்கும் அலையாத்தி மர வேர்களையும் காணலாம், இவை சூழலியல் ஆர்வத்தையும், கலாச்சார உள்நோக்கையும் ஒருங்கே வழங்குகின்றன. பரந்து விரிந்த நீர்ப்பரப்பு இயற்கையை இரசிப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதால், திறந்த மனப்பான்மை, சவால், வட கேரள மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த அனுபவம் ஆகியவற்றைத் தேடும் படகோட்டிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாக அமைகிறது.
இந்த இடம் காசர்கோடு மாவட்டத்தில் உடும்பன்தலா-திரிக்கரிப்பூர்-தலங்கரா பகுதியில் அமைந்துள்ளது.
காசர்கோடு நகரம்: 25 கி.மீ.
கண்ணூர்: 45 கி.மீ.
காலை நேரங்களில் நீர்நிலை அமைதியாகவும், தெளிவான நீருடனும் இருப்பதால் காலை நேரங்கள் உகந்தவையாக உள்ளன.
குறிப்பாக மக்கள் வருகை அதிகமுள்ள காலங்களில் முன்பதிவு செய்வது சிறந்தது.
இந்தச் செயல்பாடு மிதமான அனுபவத்தை வழங்குகிறது, சற்று பலமாகத் துடுப்புப் போட வேண்டியிருக்கலாம்.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.
ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 600 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை வேறுபடுகிறது.
இந்தப் பகுதியில் ஓதங்களும் காற்றின் நிலைமைகளும் மாறிக்கொண்டே இருப்பதால், வழித்தடங்கள் பாதிக்கப்படலாம்.
அகன்ற காயல்களையும், கடற்கரைக் காட்சிகளையும் இரசிப்பதற்கு இந்த அமைப்பு மிகவும் ஏற்றதாக உள்ளது.
இந்த அனுபவத்தில் தடையற்ற காயல்கள், அலையாத்திக் காடுகளின் விளிம்புகள், படகுச் சவாரிக்கு ஏற்ற கடற்கரைப் பகுதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.