கேரளாவின் காயல் பகுதிகளின் வசீகரமும், குறுகிய, அமைதியான கால்வாய்களும் அழகாக ஒன்றிணைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வக்கம் தங்கத் தீவு (கோல்டன் ஐலேண்ட்), கண்ணுக்கினிய கயாக்கிங் தலம் ஆகும். இங்குள்ள நீரோட்டத்தின் வேகம் குறைவாக இருப்பதால், அதிவேக கயாக்கிங் அனுபவத்தை விட சாந்தமான, சிந்தனையார்ந்த அனுபவத்தை விரும்பும் துடுப்புப் படகோட்டிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது. இங்கு நீர் மெதுவாகவும் சீராகவும் ஓடுவதால் அமைதியான சூழல் நிலவுகிறது. அதே நேரம், திறந்தவெளிப் பகுதிகளும் பாதுகாப்பான கால்வாய்களும் அனைத்துத் திறன் நிலைகளையும் கொண்ட கயாக் படகோட்டிகளுக்குப் பல்வேறு வகையான ஆய்வு வாய்ப்புகளை வழங்குகிறது.
வக்கம் தங்கத் தீவின் சுற்றுப்புறச் சூழல் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. நீர்வழித் தடத்தின் இருபுறமும் வரிசையாக அமைந்த தென்னந்தோப்புகள் நீர்ப்பரப்பின் மீது பிரதிபலிக்கும் நிழல்களை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது கடந்து செல்லும் அலையாத்திக் காடுகளின் விளிம்புகள் அவற்றின் அடர் பசுமை கொண்ட, சிக்கலான வேர் அமைப்புகளுடன் தனித்துவமான மாறுபாட்டை அளிக்கின்றன. உள்ளூர் கிராமங்கள் பாரம்பரியக் கேரள வாழ்க்கையின் காட்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம், இந்தக் காட்சிக்கு கலாச்சார ரீதியாக சிறப்புச் சேர்க்கின்றன. கயாக் பயணிகள் பெரும்பாலும் சரிவான ஓடு வேய்ந்த கூரைகளைக் கொண்ட சிறிய மர வீடுகளையும், நீரின் அருகே துணி காயப்போடும் கயிறுகளையும், தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களையும் கடந்து செல்கின்றனர். இது சுற்றுச்சூழலுடன் உண்மையான, நெருக்கமான உணர்வைத் தருகிறது. செழிப்பான இயற்கை, அமைதியான நீர்நிலைகள், கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றின் கலவை நகர்ப்புற வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஓர் அமைதியான உலகிற்குள் நுழைந்தது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
வக்கம் தங்கக் கடற்கரை, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்கள் வரை சாலை மார்க்கமாகச் சென்று, அங்கிருந்து கயாக்குகள் மூலம் நீர்வழித் தடங்களுக்குச் செல்ல முடியும். நெல் வயல்கள், தென்னை மரங்கள், குக்கிராமங்கள் நிறைந்த கிராமப்புற நிலப்பகுதிகளின் வழியாகச் செல்லும் அந்தப் பாதையே கண்ணுக்கினிய காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இது கயாக்கிங் அனுபவத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கேரளாவின் கிராமப்புற சமூகங்களின் அன்றாட வாழ்க்கை குறித்த உள்நோக்கையும் வழங்குகிறது. இந்த இடம் அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் ஒரு நாள் பயணங்களையோ அல்லது அரை நாள் சுற்றுப்பயணங்களையோ வசதியாகத் திட்டமிட முடிகிறது. கயாக்குகளும், அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும் பொதுவாக உள்ளூர் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் அல்லது கிராமச் சுற்றுலாத் திட்டங்கள் மூலம் கிடைப்பதால், இது துடுப்புப் படகோட்டிகள் அனைவருக்கும் சுமூகமான, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்கிறது.
வர்க்கலா நகரம்: 6 கி.மீ.
திருவனந்தபுரம் நகரம்: 35 கி.மீ.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 38 கி.மீ.
இந்தச் செயல்பாட்டை காலை நேரத்தில் சிறப்பாக அனுபவிக்க முடியும்.
இந்த அனுபவம் பொதுவாக சுமார் 1 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கிறது.
இந்தச் செயல்பாடு மிதமானதாகக் கருதப்படுகிறது.
அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.
ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வேறுபடுகிறது.
அலை மட்டங்களும் பருவகாலத் தாவரங்களும் வழித்தடங்களையும் அணுகும் வசதியையும் பாதிக்கக்கூடும்.
இந்த அமைப்பு இயற்கைப் புகைப்படங்களையும், பிரதிபலிப்புப் புகைப்படங்களையும் எடுப்பதற்கு மிகச் சிறந்தது.
இந்த அனுபவம் காயல் கால்வாய்கள், அமைதியான படகுப் பயண வழித்தடங்கள், அழகிய கிராமக் காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.