ஸ்ரீ நாராயண குரு தனது இளமைப் பருவத்தில் உலக விவகாரங்களின் மீது ஆழ்ந்த பற்றின்மையை வெளிப்படுத்தினார், பாரம்பரிய திருமண மற்றும் குடும்ப உறவுகளின் மீது சிறிதும் ஆர்வமின்றி இருந்தார். அவரது வெளிப்படையான ஆர்வமின்மையைக் கண்டு கவலைப்பட்ட அவரது குடும்பத்தினர், திருமணம் தான் அதற்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று நம்பினார்கள். எனவே குருவின் தந்தை தன் மகனுக்கு தன் பேத்தி காளியம்மாவைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அந்தக் காலத்தில் திருமணம் தொடர்பாக மணமகன் மற்றும் மணமகளின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அக்காலச் சமூக வழக்கங்களின்படி, மணமகனின் சகோதரி காளியம்மாவை குருவின் மணப்பெண்ணாகத் தங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டு சடங்குமுறைப்படி அவருக்கு திருமணப் புடவையை வழங்கினார். அந்தச் சடங்கு முழுவதும் குரு சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. தனக்கு முன்னால் வந்து நின்ற மணப்பெண்ணிடம் அவர் இவ்வாறு சொல்லியதாகக் கூறப்படுகிறது: ”ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த உலகில் பிறக்கிறான். எனக்கு என் பாதை இருக்கிறது, உனக்கு உன் பாதை இருக்கிறது. நான் என்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும். எனவே என்னை விட்டுவிடு.” இவ்வாறாக அவர்களின் திருமண வாழ்க்கை தொடக்க நிலையிலேயே முடிவுக்கு வந்தது.

மற்ற தலைப்புகள்