நாராயண குரு வாரணப்பள்ளியில் மாணவராக இருந்த காலத்திலும், தனது அவதூதக் காலத்திலும் சமஸ்கிருத செய்யுள்களை இயற்றினார். அந்த நேரத்தில் சமஸ்கிருதத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும், குருவுக்கு அதில் இருந்த புலமையும் சமஸ்கிருத மொழியில் துதிப்பாடல்கள் எழுத அவரைத் தூண்டியிருக்கலாம். தனது பிற்கால வாழ்க்கையில் அவர் இயற்றிய விஷ்ண்வஷ்டகம், வாசுதேவாஷ்டகம், விநாயகாஷ்டகம், குஹாஷ்டகம், பத்ரகாளியஷ்டகம், பாஹுலேயாஷ்டகம், சிதம்பரஷ்டகம், ஹோம மந்திரம் ஆகியவை சமஸ்கிருத மொழியில் அவர் இயற்றிய துதிப்பாடல்கள் ஆகும்.
குருவின் சமஸ்கிருதத் துதிப்பாடல்களில் பெரும்பாலானவை சங்கராச்சாரியாரின் துதிப்பாடல்களுடன் ஒத்துப்போகின்றன. குருவின் ஆரம்பகாலத் துதிப்பாடல்கள் சமஸ்கிருத துதிப்பாடல் இயற்றுதலின் பாரம்பரியப் பாணியைக் கடைப்பிடித்தன. கீழ் சாதியில் பிறந்த ஒருவரால் இயற்றப்பட்டிருந்த போதிலும், பரந்த நோக்குள்ள இலக்கிய உலகில் ஓர் இடத்தைப் பிடித்த வரலாற்றுச் சிறப்பும் அவற்றுக்கு உண்டு.
துதிப்பாடல் இயற்றுவதில் நாராயண குரு பெற்றிருந்த புலமை அவரது மலையாளப் படைப்புகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பல பாடல்கள் சுப்பிரமணியர், தேவி, சிவபெருமான் ஆகியோரைப் புகழ்ந்து பாடுவதாக உள்ளன. இவற்றில் ஒரு கடவுள் கீர்த்தனையாகிய தெய்வதசகம், மற்றும் ஸ்ரீ கிருஷ்ண கீர்த்தனம் ஆகியவை தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவர் சுப்பிரமணியரை “குருக்களின் குரு” என்று பயபக்தியுடன் அழைக்கிறார். சண்முக ஸ்தோத்திரம், சண்முகதசகம், சுப்பிரமணிய கீர்த்தனம், நவமஞ்சரி போன்ற துதிப்பாடல்கள் அவரது அவதூதக் காலத்தின்போது இயற்றப்பட்டவை ஆகும், இவை அனைத்துமே சுப்பிரமணியருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.
குருவுக்கு சிவபெருமான் மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அவருடைய பாடல்களில் இருபத்தெட்டு துதிப்பாடல்கள் சைவப் பாடல்கள் ஆகும். இது மலையாளத்தில் பொதுவாக வைணவப் பாடல்களே பொதுவாக வழக்கத்தில் இருக்கும் நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டிருந்தது. அவரது படைப்புகள் சைவ மரபைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. முக்கிய மலையாள சைவப் பாடல்களில், சிவாஷ்டகம், ஸ்வானுபவ கீதி, சிவப்பிரசாத பஞ்சகம், அர்த்தனாரீஸ்வர ஸ்தவம், சிவ ஸ்தவம், சதா சிவ தரிசனம், பிண்டநந்தி, சிஜ்ஜடை சிந்தனம் மற்றும் குண்டலினிப் பாட்டு ஆகியவை உள்ளடங்கும்.
குண்டலினிப் பாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது யோக சாஸ்திரத்துடன் நாராயண குருவின் ஆழ்ந்த அனுபவத்தை சக்திவாய்ந்த முறையில் விளக்குவதோடு, பக்தி, யோகா, கவிதை ஆகியவற்றைத் தனித்துவமான முறையில் ஒன்றிணைக்கிறது. இது மலையாளக் கவிதை மரபில் உள்ள கலப்படமற்ற மறைஞானத்துக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.
1914-இல் இயற்றப்பட்ட தெய்வதசகம் நாராயண குருவின் துதிப்பாடல்களில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த மந்திரம் தனது தத்துவம் மட்டுமல்லாமல் இந்தியத் தத்துவத்தின் முழுச் சாராம்சத்தையும் உள்ளடக்கியிருப்பதால், ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் அதைத் தினமும் உச்சரிக்க வேண்டும் என்று குரு விரும்பினார். இந்தத் துதிப்பாடல் கடவுளை அறுதிநிலை அண்ட சக்தியாகப் போற்றுகிறது. ஒரு தத்துவ ஞானியாகவும் கவிஞராகவும் திகழ்ந்த குரு தனது வட்டார மொழிப் பாடல்களின் மூலம் திராவிடத் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் மலையாளத் துதிப்பாடல்களுடன் திறமையாக ஒருங்கிணைத்தார். இது அவரது ஆழ்ந்த நுண்ணறிவையும் கவித்துவ மேதமையையும் வெளிப்படுத்துகிறது.
தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த குரு, தேவாரப்பதிகங்கள் பாடலை இயற்றினார். ’சிறப்பு வழிபாடு’ என்ற பொருள் கொண்ட ’தேவாரம்’ என்ற சொல் பிற்காலத்தில் சிவபெருமான் மீது ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தும் சைவத் துதிப்பாடல்களுக்கு ஒத்த சொல்லாக மாறியது.
’தேவாரப்பதிகங்களில்’, அருமானூர் கோயிலில் உள்ள நயினார் சிலையைப் போற்றிப் புகழ்கிறார். இது, சிதிலமடைந்த அந்தக் கோயிலில் வழிபாடு செய்யும்போது அவர் பாடிய துதிப்பாடல் ஆகும். இந்தப் பாடல் சிவபெருமான் மீதான பக்தியைப் பிரதிபலிக்கிறது, அந்தத் தெய்வத்தின் பல்வேறு அம்சங்களைப் போற்றிப் புகழ்கிறது. தமிழ் இலக்கியப் பண்பாட்டில் குருவின் ஆழமான ஈடுபாடு அவரது சொந்த மரபுகள் பற்றிய புரிதலைக் கணிசமாக ஆழப்படுத்தியது.