சகோதரன் அய்யப்பன்

தளராத சமூகச் சீர்திருத்தவாதியான சகோதரன் அய்யப்பன், செறாயி கௌரீஸ்வரர் கோயில் பிரதிஷ்டையில் நாராயண குருவைச் சந்தித்த பிறகு சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் குருவின் கொள்கைகளைப் பரப்புவதில் முக்கியக் கவனம் செலுத்தினார்.

அய்யப்பன் S.N.D.P. யோகம் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார், கொச்சி மற்றும் திருவிதாங்கூர்-கொச்சின் இரண்டு தொகுதிகளிலும் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நீதியைக் கடைப்பிடிப்பதே மனித குலத்தின் மிக உயர்ந்த கடமை என அவர் கருதினார். அவர் ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளராகவும் விளங்கினார், அவரது சொற்பொழிவுகள் பின்தங்கிய சமூகங்களை சமூகத் தீமைகளையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளையும் நிராகரிக்கத் தூண்டின. சாதிப் பாகுபாடு அறிவியலுக்குப் புறம்பானது, தீங்கு விளைவிப்பது மற்றும் தேவையற்றது என்பதை உணர்ந்த அவர், மூட நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் அறிவியல் தர்க்கத்தின் மூலம் எதிர்த்தார். ஈழவர்களுக்கான உண்மையான சமத்துவம் என்பது தங்களை விடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். இதை அடைவதற்காக அவர் தாழ்த்தப்பட்ட சாதியினருடன் ‘சம்பந்தி விருந்து’ (கூட்டு விருந்து) உண்ணும் வழக்கத்தைத் தொடங்கினார். இந்தச் செயல் பழமைவாத ஈழவர்கள் அவருக்கு ‘புலையன் அய்யப்பன்’ என்று கேலிப் பெயரிட வழிவகுத்தது. இந்த இயக்கத்தில் இருந்து தான் ‘சகோதர சங்கம்’ (சகோதரத்துவ அமைப்பு) தோன்றியது.

சமபந்தி விருந்துக்கு கணிசமான எதிர்ப்பு இருந்தபோதிலும், அய்யப்பனுக்கு குருவின் ஆதரவு கிடைத்தது. மனிதர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கலப்புத் திருமணமும் கலப்பு விருந்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்று உறுதிப்படுத்தி சகோதர சங்கத்துக்கு அவர் ஒரு செய்தி அனுப்பினார். இந்த ஆழமான வார்த்தைகள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான சக்திவாய்ந்த பிரகடனமாக மாறின. சகோதரன் அய்யப்பன் அதன் அச்சிடப்பட்ட பிரதிகளைப் பரவலாக விநியோகித்தார். பிற்காலத்தில் தனது கருத்துகளை மேலும் பரப்புவதற்காக ‘சகோதரன்’ என்ற பத்திரிகையை நிறுவினார், இது அவருக்கு ’சகோதரன் அய்யப்பன்’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

கோயிலை சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாக குரு கருதிய அதே நேரத்தில், சகோதரன் அதை வணிக இலாபத்துக்காக தர்மத்தைச் சுரண்டும் ஒரு நிறுவனமாகப் பார்த்தார். குரு மதத்தின் சாரத்தின் மூலம் மனித ஒற்றுமையைக் கற்பனை செய்தார், அதே நேரத்தில் மனித இனத்தைப் பிளவுபடுத்தும் மதம் தேவையற்றது என அய்யப்பன் திட்டவட்டமாக அறிவித்தார். அவர்களின் அணுகுமுறைகள் வேறுபட்டிருந்தாலும், அவர்களுடைய பார்வையின் மையக் கருத்து ஒன்றுபட்டதாகவே இருந்தது. இந்து சமயத்தில் நிலவிய அபத்தங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அய்யப்பன் காட்டிய கடுமையான எதிர்ப்பு அவருடைய கவிதைகளுக்கு வலிமை அளித்தது. முற்போக்கு இலக்கிய இயக்கம் தோன்றுவதற்கு முன்பே அவர் பல புகழ்பெற்ற, ஊக்கமளிக்கும் கவிதைகளை இயற்றினார். அவை அனைத்திலும் முழுமையான இலக்கிய நோக்கத்தை விட சித்தாந்தப் பிரச்சாரத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. குருவும் அவரது சீடரும் சமயங்களுக்கு இடையிலான மோதல் என்ற சமூகப் பிரச்சனையை அணுகினர். குரு சமரசத்தை நாடினார், ஆனால் அய்யப்பன் சமயங்களை முழுமையாக நிராகரிப்பதில் தான் நிரந்தரத் தீர்வு இருக்கிறது என்று நம்பினார்.

மற்ற தலைப்புகள்