நாராயண குரு ஏற்கனவே இருந்த கோயில் கருத்துகளை அழித்தார் அல்லது மாற்றியமைத்தார். இந்துத்துவக் கொள்கையில் நிலவிய சிதைந்த நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிராக குரு காட்டிய ஒரு மென்மையான எதிர்ப்பாக இதைக் கருதலாம். குரு 51 கோயில் பிரதிஷ்டைகளை நடத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. இவற்றில் 23 சிவ பிரதிஷ்டைகள், 3 தேவை பிரதிஷ்டைகள், 14 சுப்பிரமணியர் பிரதிஷ்டைகள், 2 கணபதி பிரதிஷ்டைகள், எந்தவொரு ஆண் அல்லது பெண் தெய்வங்களையும் சாராத 9 பிரதிஷ்டைகள் ஆகியவை அடங்கும். கடைசியாகக் கூறியதில் விளக்குகள், பட்டயத் தகடுகள், கண்ணாடிகள், பிரணவம் (ஓம் மந்திரம்), சிலம்பு (காற்சிலம்பு) மற்றும் பீடம் (புனித இருக்கை) ஆகியவை உள்ளடங்கும். குருவின் அனைத்துக் கோயில் பிரதிஷ்டைகளும் அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.
சாதாரண மக்கள் கடவுளை வணங்குவதற்கு குரு ஒரு புதிய வழியைத் திறந்து வைத்தார். ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் கோயில் எதுவும் இல்லை என்பதால், குருவின் கோயில் பிரதிஷ்டையின் மூன்றாம் கட்டத்தில் வழிபாட்டுப் பொருள் எதுவும் இடம்பெறவில்லை. சடங்குகளையும் திருவிழாக்களையும் கொண்ட கோயில், தியானத்துக்கான வசதிகளை மட்டுமே கொண்ட சாரதா மடம், சிலை அல்லது கோயில் எதுவுமே இல்லாத அத்வைத ஆசிரமம் ஆகியவை வழிபாட்டின் மூன்று நிலைகளை வெளிப்படுத்துகின்றன. கோயில்கள் உட்பட, சமய நிறுவனங்கள் வழக்கொழிந்து வருகின்றன என்ற குருவின் உணர்தலின் போக்கையே இது பிரதிபலிக்கிறது.
குரு, சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாக கோயில்களைப் பயன்படுத்தியதன் மூலம் உறுதியாகக் காலூன்றியிருந்த உயர் சாதியினரின் ஆதிக்கத்துக்குச் சவால் விடுத்தார், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மகத்தான செயல் ஆகும். அவர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க கோயில்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல் வழிபாட்டில் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக துதிப்பாடல்களையும் இயற்றினார். தொடக்கத்தில் கோயில்களின் இந்தக் கருத்து சமயச் சின்னங்களில் வேரூன்றியிருந்தது, ஆனால் குரு தொடர்ந்து தனது தொலைநோக்குப் பார்வையைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார். ஒளி, விளக்குகள், கண்ணாடிகள், அத்வைத ஆசிரமம் போன்ற கூறுகள் மக்களை இருமையின்மைக் கொள்கைகளுக்கு நெருக்கமாக ஈர்க்கும் வழிமுறைகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. கோயில் கட்டுமானங்கள் தனது முக்கிய நோக்கங்களில் இருந்து விலகிச் செல்கின்றன என்பதை உணர்ந்த குரு, இறுதியில் அந்தப் பணிகளில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார் என்பதை ஊகிக்க முடிகிறது.