திருச்சூரில் உள்ள காரமுக்கு கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் மூலம் குருவின் கோயில் பற்றிய கருத்தாக்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஏற்பாட்டாளர்கள் ஒரு தெய்வத்தின் சிலையைப் பிரதிஷ்டை செய்யும்படி குருவிடம் கேட்டுக்கொண்டபோது, உருவச் சிலைக்குப் பதிலாக ஒரு விளக்கை மாட்டி வைத்தாலே போதும் என அவர் பதிலளித்தார். அந்த விளக்கைச் சுற்றிலும் பல்வேறு தெய்வங்களின் படங்களை வைத்தால் மக்கள் திருப்தி அடைவார்கள் என குரு மேலும் கூறினார். அது வரை, குரு தனது கோயில் பிரதிஷ்டைகளில் உருவ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இங்கு, முதல் முறையாக, அவர் அதற்குப் பதிலாக மூன்று திரிகளைக் கொண்ட விளக்கைப் பிரதிஷ்டை செய்தார். ‘அறிவின் வானம்’ என்பதைக் குறிக்கும் வகையில் குரு அந்தக் கோயிலுக்கு சிதம்பரம் எனப் பெயர் சூட்டினார். இங்கு, ஒளி காட்சிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்தையும் பக்தனை அறிவுத் தெளிவை நோக்கி வழிநடத்தக்கூடிய ஒரு சின்னமாக குரு கருதினார்.